
துணுக்காய் கல்வி வலயத்தில் கடமையாற்றிய 44ஆசிரியர்கள் பணியிடமாற்றம் பெற்று வெளிவலயங்களுக்கு சேவையாற்றச் சென்றுள்ளனர். இதன்மூலம் துணுக்காய் கல்விவலயத்தில் ஏற்பட்ட 44ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும் நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்திய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப்பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் வலியுறுத்தியிருந்தார்.
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 17.7.2025 இன்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்ற போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நிச்சயமாக இந்த சிக்கல் நிலையை தீர்ப்பதற்கு வடமாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றிய 44பேர் இங்கிருந்து பணியிடமாற்றம்பெற்று சென்றிருக்கின்ற நிலையில், வெளிவலயங்களிலிருந்து 4ஆசிரியர்கள் மாத்திரமே துணுக்காய் வலயத்திற்கு வருகைதந்துள்ளனர். 40ஆசிரியர்கள் இதுவரை துணுக்காய் வலயத்திற்கு வருகைதந்து தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை.
இவ்வாறு தமது கடமைகளை இதுவரை பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கெதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
ஆசிரியர்நியமனங்கள் திறந்த போட்டிப்பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றன. மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொண்டால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும். எனவே இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்வதற்கு நாம் தீர்மானங்களை எடுக்கவேண்டும்.
துணுக்காய் வலயத்தில் ஏற்கனவே 160ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. தற்போது 40ஆசிரியர்கள் கடமைகளைப் பெறுப்பேற்காதநிலையில் துணுக்காய் வலயத்தில் ஆசிரியர்களின் வெற்றிடங்கள் 200ஆக உயர்வடைந்திருக்கின்றது. இதனால் துணுக்காய் வலயத்தினுடைய கற்றல் செயற்பாடுகள் இன்னும் மோசமடைவதற்கான நிலையே ஏற்பட்டிருக்கின்றது.
எமது பிள்ளைகளும் கல்விகற்கவேண்டும். வன்னிஎன்றால் ஒதுக்கிவிடுக்கின்ற நிலமை, முல்லைத்தீவு மாவட்டம் என்றால் ஒதுக்கிவிடுக்கின்ற நிலமை, துணுக்காய் என்றால் ஒதுக்கிவிடுகின்ற நிலமை இருக்கக்கூடாது. அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது – என்றார்.
மேலும் இப்பிரச்சினை தொடர்பில் கடந்த 15.07 2025அன்று இடம்பெற்ற மன்னார், முசலிப்பிரலி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் பேசப்பட்டது. இக்கூட்டத்திலும் மன்னார் வலயத்திலிருந்து பல ஆசிரியர்கள் பணியிடமாற்றம்பெற்று சென்றிருப்பதாகவும், அந்த வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களிலிருந்து ஆசிரியர்கள் வருகைதந்து தமது கடமைகளை இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்கவில்லையெனவும் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன்போது வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது வலியுறுத்தலுக்கமைய மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளவேண்டுமென முசலி பிரதேச அபிவிருத்திக்குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.