
பிரிமியர் போட்டியில் டில்லி அணி, 8 விக்கெட்டில் லக்னோவை வீழ்த்தியது.
பிரிமியர் கிரிக்கெட்டில் நேற்று லக்னோவில் நடந்த போட்டியில், டில்லி, லக்னோ அணிகள் மீண்டும் மோதின. இத்தொடரில் இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் டில்லி அணி வெற்றி பெற்றிருந்தது. கடந்த முறை போல, மீண்டும் ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், வழக்கம் போல பீல்டிங் தேர்வு செய்தார்.
லக்னோ அணிக்கு மார்க்ரம், மிட்சல் மார்ஷ் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஸ்டார்க் வீசிய இரண்டாவது ஓவரில் மார்க்ரம் சிக்சர் அடித்தார். அடுத்து வந்த முகேஷ் குமார் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார் மார்க்ரம். தன் பங்கிற்கு சமீரா பந்தில் ஒரு சிக்சர் அடித்தார் மிட்சல் மார்ஷ். டில்லி அணி ‘பவர் பிளே’ ஓவரில் 51/0 ரன் எடுத்தது.
விப்ராஜ் நிஹாம் வீசிய போட்டியின் 8 வது ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த மார்க்ரம், இத்தொடரில் நான்காவது அரைசதம் (30 பந்து) எட்டினார்.
லக்னோ அணி 9 ஓவரில் 82/0 ரன் எடுத்தது. இந்நிலையில் சமீரா பந்தில் மார்க்ரம் (52) அவுட்டானார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன், குல்தீப் ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்தார். பூரனை (9), ஸ்டார்க் போல்டாக்கி அனுப்பி வைத்தார். இதன் பின் அணியின் ரன் வேகம் அப்படியே மந்தமானது.
போட்டியின் 14வது ஓவரை வீசிய முகேஷ் குமார், லக்னோ அணிக்கு ‘இரட்டை அடி’ கொடுத்தார். 2வது பந்தில், அப்துல் சமத் (8 பந்தில் 2 ரன்) முகேஷ் குமாரிடமே ‘கேட்ச்’ கொடுத்தார். தொடர்ந்து மிரட்டிய இவர், கடைசி பந்தில் மிட்சல் மார்ஷை (45) வெளியேற்றினார்.
பின் வந்த படோனி, சமீரா, ஸ்டார்க் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய போதும் ஸ்கோர், பெரியளவு உயரவில்லை. போட்டியின் 20 வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இதன் முதல் மூன்று பந்தில் படோனி ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் படோனி (36 ரன், 21 பந்து) அவுட்டானார். அடுத்து வந்த ரிஷாப்பை, கடைசி பந்தில் ‘டக்’ அவுட்டாக்கினார் முகேஷ் குமார்.
லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன் மட்டும் எடுத்தது. மில்லர் (14) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி சார்பில் முகேஷ் குமார் அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.