
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்குச் செல்லும் வீதியைச் சீரமைப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு மாவட்ட கமநலஅபிவிருத்தித் திணைக்களத்தினாலேயே குறித்த விவசாய வீதியின் சீரமைப்பிற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு- முள்ளியவளை கமநலசேவைநிலயப் பிரிவிலுள்ள, முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்குச் செல்லும் பாதை சீரின்மையால் விவசாயிகள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டையடுத்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 14.08.2025அன்று குறித்த பகுதிக்கு நேரில்சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.
குறிப்பாக 300ஏக்கர்வரையான விவசாயநிலங்களுக்குச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் சுமார் 02கிலோமீற்றர் தூரமான குறித்த விவசாய வீதி சீரின்றிக் காணப்படுவதால் விதைநெல், உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்வதிலும், அறுவடைசெய்த நெல்லினை எடுத்துச்செல்வதிலும் அப்பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் குறைபாடுகளைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முள்ளியவளை கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த வீதியை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென முள்ளியவளை கமநலஅபிவிருத்தி உத்தியோகத்தர் பேரம்பலம் தயாரூபன் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த களவிஜயத்தின்போது கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஜோசெப் மாசிலாமணியும் கலந்துகொண்டிருந்தார்.
இத்தகைய சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று குறித்த வீதியின் சீரமைப்புவேலைகளுக்குரிய ஆரம்பக்கட்டபணிகளை முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.