
உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
நத்தார், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறிஸ்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.
இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறிஸ்தவக் கருத்துகளோடு, கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறிஸ்துமஸ் தன்னகத்தே கொண்டுள்ளது.இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழியாக வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, இயேசுவின் சரியான பிறந்த தேதியை அறிந்து கொள்வதை விட, மனிதகுலத்தின் பாவங்களுக்குக் கழுவாயாகக் கடவுள் மனித வடிவில் உலகில் வந்தார் என்று நம்புவதே கிறிஸ்துமஸ் கொண்டாடுவதன் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவத்தின் பரவல் காரணமாகவும் அக்கொண்டாட்டங்களில் காணப்படும் மேற்குலக நாகரிகங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க, பிரித்தானிய வழமைகளுக்கு மேலதிகமாக அவ்வப்பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வேறுபடுகின்றன.
இன்று நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எமது இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்களை வடலி ஊடகம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.